திங்கள், 20 டிசம்பர், 2010

இட்லி தோசை சாப்பிடுங்க, கூடவே உப்புமா, பொங்கல், சப்பாத்தி, புட்டு, இடியாப்பமும்......

இட்லி தோசை சாப்பிடுங்க, 
கூடவே உப்புமா, பொங்கல், சப்பாத்தி, புட்டு, இடியாப்பமும்......

இட்லி தோசை சாப்பிட வேண்டாம் என்றாலே நிறைய பேர் பயந்து ஓடுறாங்க...அதனால் தான் இந்த தலைப்பு.

மேலும் இட்லி தோசையை விட்டால் என்ன தான் செய்வது, நீங்களே தொகுத்து தாருங்களேன் என்று கேட்டார்கள். எனவே இந்த குறிப்பு.

1 .
முதல் படியாக, ஒரு வாரம் முழுமைக்கும் இட்லி - தோசை மாவை அரைத்து   குளிர் பதன பெட்டியில் (தமிழவேள் மொழியில் - சவப்பெட்டி ?)  வைப்பதை நிறுத்துங்கள்.  (Necessity is the mother of Invention - தேவையே நமது கற்பனை குதிரையை தட்டி விட்டு பல அனுபவங்களை நமக்கு பெற்று தரும் ). அப்படியே அரைத்தாலும் ஒரு நாளுக்கு மட்டுமே வருமாறு பார்த்துக்கொண்டு காலி செய்து விடுங்கள்.  எங்கள் வீட்டில் இப்பொழுதெல்லாம், நிறைய விருந்தினர் வந்தாலும், பிற விசேஷ நாட்களான பொங்கல், தீபாவளிக்கும் தான் இட்லி / தோசை)

2.
எங்கள் வீட்டில் காலையும் இரவும் சிற்றுண்டி தான். ஆனாலும் இட்லி - தோசை இல்லாமல் ஓடுகிறது என்றால், கண்டிப்பாக அனைவராலும் முடியும் ..... எங்களது  காலை சமையல் (சிற்றுண்டி + பகல் உணவு) ஏழு மணிக்குள் முடிந்து விடும். இரவு சிற்றுண்டிக்கு அரை முதல் ஒரு மணி நேரமே கிடைக்கும் (செய்து உண்டு முடிக்க).....அதனால் தைரியமாக இட்லி தோசையை துறந்து பிற உணவு வகைகளை முயன்று பாருங்கள்.

3.
இது போல உணவு முறையை  சோதித்து பார்க்க விரும்பியதும், நிறைய தோழிகள் அவர்களுக்கு தெரிந்து, நினைவில் இருந்த பல செய்முறைகளை பகிர்ந்து கொண்டனர். அவற்றில் பல 60-70 களில் இருக்கும் அவர்களது பெற்றோர் செய்து மகிழ்ந்த உணவுகள். அவர்கள் அனைவரையும் பழங்கால பாரம்பரிய சமையல் முறைக்கு அழைத்து சென்று மகிழ வைத்தோம்...அவர்கள் அனைவருக்கும் நன்றி. 

4.
இட்லி - தோசையை நிறுத்த சொன்னாலே பலரும் நம்மை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள் . (அலோபதி மருந்துகளை நிறுத்த சொன்னாலும் இதே பார்வை தான்).  இந்த இரண்டுமே ஒரு 30-40 வருடங்களுக்காக நம் வாழ்க்கையில் இரண்டற கலந்து விட்டவை என்பதை நமது உண்மை/பொது  அறிவால் எண்ணிப்பார்த்து உணர்ந்தால் கண்டிப்பாக அனைவரும் மாறி நல்ல உடல் நலனும் பெற்று வாழ்வர்.  

5.
பல அலுவலக நண்பர்களும், இட்லி தோசையை நிறுத்திய பின்னர் வயிறு மிக லேசாக உணர்வதாக கூறினார். (வாயு தொல்லை, நெஞ்செரிச்சல் கட்டுப்படுகிறது)  மேலும்  காலை 9-11 மணி , இரவு 9-11 மணி உணவு உண்பதை தவிர்த்தாலும் ஒரு நல்ல வித்தியாசத்தை / உடல் நலனை உணர்வதாக கூறினர். 

6.
இந்த வகையான உணவுகளை உங்கள் வீட்டில் அனைவருக்குமா செய்கிறீர்கள் என்பது அடுத்த கேள்வி....உண்மை தான், பல நேரங்களில் குழந்தைகளுக்காக, பன்னீர்(பாலாடை கட்டி), தோசை என்று மாற்றி மாற்றி செய்து  சமாளித்து விடுவோம்....சில நேரங்களில், குட்டிகளுக்கும் (சில பெரியவர்களுக்கும் தான்), அவர்கள் மன சமாதானத்திற்காக, oats , கஞ்சி,    அவசர உப்புமா, பழைய சோறுஅரிசி சோறு + ரசம் என சமாளிக்க வேண்டியது தான்..........ஆனால், அடுத்த அடுத்த முறை செய்யும்பொழுது (எங்களுக்கு எல்லாம் ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்த பிறகு).....அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கின்றனர்.... 

சரி, இனி குறிப்புகளுக்கு வருவோம்....

இதில் நிறைய செய்முறைகள் Dr .தமிழவேள் அளித்த தொகுப்பிலிருந்து செய்து பார்க்கப்பட்டது. 
முதலில் சில தகவல்கள் உங்கள் பார்வைக்காக...

உப்புமா வகைகள். 

பொதுவாக உப்புமா செய்யும் முறை.
    
எண்ணெய் + நெய்  ஊற்றி கடுகு உளுந்து, கடலை பருப்பு, முழு வேர்க்கடலை , கருவேப்பிலை தாளித்து , (சின்ன வெங்காயமும் அறிந்து போடலாம், விருப்பம் இருந்தால்), பிறகு, உப்புமா செய்ய வேண்டிய பொருளை இந்த எண்ணையிலேயே வதக்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து  ஊற்றி கிளறினால் சுவையான உப்புமா தயார்.
1. ரவை உப்புமா 
2.
ரவையும், சேமியாவும் சம பங்கு சேர்த்து உப்புமா
3.
கோதுமை ரவை உப்புமா
     
வேக நேரமாகுமாகையால் "பிரஷர் குக்கர் "- இல் வைத்தல் நலம்.
4.
அரிசி ரவை உப்புமா
    
அரிசி + துவரம்பருப்பு + மிளகு சீரகம் சேர்ந்த கலவை - (குருணை)       வேக நேரமாகுமாகையால் "பிரஷர் குக்கர் "- இல் வைத்தல் நலம்.
5.
சோளம் சேர்த்த உப்புமா
    
ரவை ஒரு பங்கு, பொடித்த சோளம் கால் பங்கு
6. ரவை கிச்சடி.
         உப்புமா போன்ற  செய்முறையில், காய்கறிகளை (உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி)  சேர்த்து செய்ய  வேண்டும். 
7. தமிழவேள் குறிப்பில் உள்ள - நெப்பரிசி  உப்புமா - முதல் நாள் இரவே நேப்பரிசியை ஊற வைத்து, அதே செய்முறையில், தண்ணீர் சேர்க்காமல், தேவை பட்டால் லேசாக தெளித்து, செய்யலாம்... இந்த உப்புமா "சாபுதானா உப்புமா" என்று வட இந்தியாவில் பிரசித்தமாம்...சாரதா கூறினார்கள்....மேலும் இங்கும், விரதம் இருப்பவர்கள் விரதம் முடிக்கும்பொழுது இதை சாப்பிடுவார்களாம்...(மிகுந்த சத்துள்ளது என்பதால்)....இதை கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடுகிறது...
   
 

சேமியா   வகைகள் 

8.
கேழ்வரகு சேமியா  - கடைகளில் அல்லது காதி பவனில் கிடைக்கும் கேழ்வரகு சேமியாவை ஒரு நிமிடம் நீரில் ஊறவைத்து, வடித்து, ஐந்து நிமிடம் இட்லி தட்டில் / ஆவியில் வேக வைத்து எடுத்துகொள்ளவும்.  பின்னர் தாளித்து, சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து, வேக வைத்த கேழ்வரகு சேமியாவை சேர்த்து  கிளறினால் சுவையான ராகி / கேழ்வரகு சேமியா தயார்.

9.
கோதுமை சேமியா : மேற்கண்ட அதே செய்முறையில் செய்யவும்.

10.
கம்பு சேமியா :  மேற்கண்ட அதே செய்முறையில் செய்யவும். 

11 .
வழக்கமான சேமியா : இதற்கு கடையில் கிடைக்கும் சேமியாவை (அணில் சேமியா நன்றாக இருக்கிறது) வாங்கி, தாளித்து, சேமியாவை எண்ணெயிலேயே வதக்கி, அளவான கொதிக்க வைத்த  நீர் சேர்த்து கிளறி செய்து முடிக்கவும். மிக வேகமாக செய்யகூடிய சிற்றுண்டி இது.



(
கடைகளில் இவ்வகை சிறு தானிய வகைகள் கிடைக்க ஆரம்பித்திருப்பது,  - மக்களிடம் சிறு தானியங்களை பயன்படுத்தும் ஆவல் அதிகரித்திருப்பதை காட்டுகிறது. பல வகை (கம்பு, சோளம்,கேழ்வரகு )தோசை மாவு வகைகளும் கிடைக்கின்றன ).

இட்லி வகைகள். 

12. இட்லி ரவை இட்லி.

12.இட்லி ரவை (உடைத்த குருணை அரிசி), உளுந்து மாவு மற்றும் அரிசி மாவை, உங்கள் கைப்பக்குவம் போல கலந்து, சிறிது தயிர் சேர்த்து, ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதில் கடுகு, உளுந்து, கரூவேப்பிலை , கொத்தமல்லி தாளித்து சேர்த்து, முடிந்தால் கிடைத்த காய்கறிகைகளையும் பொடியாக நறுக்கி போடலாம். பிறகு இதை இட்லி தட்டில் ஊற்றி எடுத்தால், சுவையான இட்லி தயார்.

13. 
தமிழவேள் குறிப்பில் உள்ள - நெப்பரிசி இட்லி. (உளுந்து ஒரு பங்கு, பச்சரிசி, புழுங்கலரிசி, நெப்பரிசி கால் கால் பங்கு) - சேர்த்து 2 மணி நேரம்  ஊற வைத்து  செய்யலாம்.

14.
தமிழவேள் குறிப்பில் உள்ள - நெப்பரிசி இட்லி.- இதே குறிப்பில் நெப்பரிசி சேர்க்காமலும், நன்றாகவே வருகிறது 

15.
தமிழவேள் குறிப்பில் உள்ள - பருப்பு   இட்லி (பச்சை பயிறு, உளுந்து 2 மணி நேரம் ஊற வைத்து அரைத்தது)

16.
தமிழவேள் குறிப்பில் உள்ள - கொண்டைகடலை இட்லி : இது இட்லியை விட தோசைக்கு மிக நன்றாக உள்ளது. முள்ளங்கி /கேரட் -பொடியாக நறுக்கி, சேர்த்து செய்தால் மிகவும் சிறப்பாக இருந்தது.

தோசை/அடை வகைகள் 

17. கேழ்வரகு அடை : கேழ்வரகு மாவை நீர் ஊற்றி பிசைந்து, தயிர் சேர்த்து அரை மணி நேரம் வைத்திருந்து அடையாக சுடலாம். சிறிது நீர்க்க இருந்தால் தோசையாகவும் ஆக்கிவிடலாம். இதனுடன் சுவைக்கு, மிளகு , சீரகத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.

18.
கம்பு தோசை - (பரணி தமிழவேள் கூறியது)  கம்பு மாவுடன், உளுந்து (ஊற வைத்த அரைத்து) சேர்த்து, தயிர் சேர்த்து கலந்து வைத்த, அரை மணி நேரம் கழித்து தோசை செய்யலாம்.

கடையில் கிடைக்கும் கம்பு மாவில், கருப்பு உளுந்தும் சேர்த்து அரைத்துள்ளார்கள். அதனால், சிறிது அரிசி மாவு சேர்த்தல் போதுமானது. 

19.
தவலை அடை / தோசை/ ஊத்தப்பம்.....அரிசி ஊற வைத்து  கர கரவென அரைத்து , அதனுடன் அரைத்த உளுந்து சேர்த்து, ஊத்தப்பம் போல செய்யலாம். (அபர்ணா கூறியது)..இதுவும் மிக நன்றாக வந்தது. உடனே அரைத்து செய்தாலும் வழக்கமான இட்லி தோசை மாவை போலவே இருக்கும்...இந்த மாவில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, கொதமல்லி தாளித்து கொட்டியும் செய்யலாம்...இதை தோசை போலவும், அடை போலவும் ஊத்தப்பம் (மாவை ஊற்றி மூடி வைத்த வேக விட்டு எடுக்கவும்), போலவும் செய்யலாம்.  எப்படி செய்தாலும் நன்றாகவே வருகிறது. 
 
 
20. கோதுமை தோசை : கோதுமை மாவை கரைத்து, மிளகு தூள் போட்டு, (கூடுமானவரை பச்சை மிளகாயை தவிர்த்து விடலாம்)...பிடித்தால் சிறிய வெங்காயம் நறுக்கி போட்டு, சிறிது தயிர் ஊற்றி அரை மணி நேரம்/ ஒரு மணி நேரம் ஊற வைத்த, உடனே சுடலாம். 

21.
ரவை தோசை : ரவை ஒரு பங்கு, அரிசி மாவு இரு பங்கு, மித மாவு இரு பங்கு - இதனுடன் தயிர் , முழு மிலகு சேர்த்து அரை மணி நேரம்/ ஒரு மணி நேரம் ஊற வைத்து சுடலாம். 

22.
 கஞ்சி மாவு தோசை - குழந்தைகளுக்கு அரைத்து  கொடுக்கும் நவதானிய காஞ்சி மாவையும், கரைத்து, சிறிது தயிர் ஊற்றி ஊற வைத்து தோசை  செய்தால் சுவையாக இருக்கும். 

(இன்னும் அந்த கால சோள தோசை போன்றவற்றை முயற்சித்து பார்த்து சொல்லுகிறேன்....)

பொங்கல் வகைகள் 

23. பச்சரிசி + பாசிபருப்பு 
24.
கோதுமை ரவை + பாசிபருப்பு

(
இவை இரண்டுடனும் கால் பங்கு கம்பு (முழு) சேர்த்து வேக வைத்தால் மிகவும் சுவையாக உள்ளது)

இடியாப்பம் 

25. பச்சரிசி மாவில் வெந்நீர் ஊற்றி பிசைந்து, இடியாப்ப அச்சில் இட்டு, இட்லி தட்டு, அல்லது இடியாப்ப தட்டில் .....பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.   சில நேரம் மீந்த மாவை, அப்படியே கொழுக்கட்டையாகவும் ஆக்கி விடலாம், (வெல்லம் அல்லது கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்து).....குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.... இடியாப்பத்திற்கு தேங்காய் பால் மிகவும் சுவையாக இருக்கும்....இனிப்பு சுவைக்கு பனங்கற்கண்டை போடி செய்து போடலாம்...(வெள்ளை சர்க்கரையை தவிர்த்து).

புட்டு வகைகள் 
26. நாகர் கோவில் / கேரளா ஸ்பெஷல் இது.....அப்பாவின் நண்பர் வீட்டில் சிறு வயதில் சாப்பிட்ட நினைவு..... - அரிசி மாவை நீர் தெளித்து, கட்டியின்றி பிசைந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.. முதல் நாளே ஊற வைத்து (அல்லது முளை கட்டிய) பச்சை பயிரையும் வேக வைத்து கொள்ளவும்....அப்பளங்களை பொரித்து கொள்ளவும்...பிறகு பரிமாறும்பொழுது, புட்டு + பச்சை பயிறு + அப்பளம் பொடித்து + பனங்கற்கண்டை சேர்த்து சாப்பிடலாம்.. இதனுடன் வாழை பழத்தையும் சேர்த்து உண்பர்..

27.
மேற்கண்ட அதே செய்முறையில், அரிசி மாவிற்கு பதிலாக - கேழ்வரகு மாவு 

28.
மேற்கண்ட அதே செய்முறையில், அரிசி மாவிற்கு பதிலாக - சோள மாவு 

ஒரு மாறுதலுக்கு, துருவிய தேங்காய் மற்றும் பொடித்த நாட்டு சர்க்கரையும் சேர்க்கலாம்.  

சப்பாத்தி 
29 . கோதுமை மாவில் செய்யும் வழக்கமான சப்பாத்தி...

30 . கோதுமை மாவு பிசையும் பொழுதே முள்ளங்கி துருவி (தண்ணீர் சேர்க்காமல்) , பிறகு சப்பாத்தியாக இடலாம்....(முள்ளங்கி பராத்தா என்று பெயர்).

31 .கோதுமை மாவு பிசையும் பொழுதே காரெட் (இன் முள்ளங்கி) துருவி (தண்ணீர் சேர்க்காமல்) , பிறகு சப்பாத்தியாக இடலாம்..... மிகுந்த சுவையுடன் இருக்கும்.....காய் சாப்பிடாத குழந்தைகளையும் சாப்பிட வைத்து விடலாம்.

32 . கோதுமை மாவு பிசைந்து, ஒரு உருண்டை பிடித்து - குழி போல் செய்யவும் - வெந்த உருளைகிழங்கை (வெங்காயமும் துருவி சேர்க்கலாம்) உள்ளே வைத்த பிறகு அதனுடன் சேர்ந்து தட்டையாக்கி சப்பாத்தி கல்லில் போட்டு எடுத்தால் , வெறும் கட்டி தயிர் சேர்த்து சாப்பிட்டு விடலாம்.

33 . 
கோதுமை மாவு பிசைந்து, ஒரு உருண்டை பிடித்து - குழி போல் செய்யவும் - cauli flower, மற்றும் பனீர் சேர்த்து உள்ளே வைத்த பிறகு அதனுடன் சேர்ந்து தட்டையாக்கி போட்டேடுத்தால், மிகவும் சுவையாக இருக்கும்... (cauli flower, மற்றும் பனீர் துருவலாக்கி, தேவையான மசாலா பொடிகளை சேர்த்து பிசைந்து வைத்துகொள்ள வேண்டும்) ... சாரதா எங்கள் வீட்டிற்கு வந்து செய்து காட்டினார்கள். அனைவரும் ரசித்து சாப்பிட்டோம்....

34 . சப்பாத்தி மாவில் வெந்தய கீரையை சேர்த்து பிசைந்து செய்தால், மிகவும் வாசமாகவும் , சுவையாகவும் இருக்கும்....

(கடைகளில் mooli parathaa, aalu parathaa, gobi parathaa, paneer parathaa என்ற பெயர்களில் கிடைக்கும் அனைத்தும், நம்மாலும், வீட்டில் மிக எளிமையாக செய்ய முடியும்...)

இது போல செய்யும் பராத்தாக்களுக்கு, தொட்டுக்கொள்ள பெரும்பாலும், தயிர் அல்லது தயிர் கலந்து செய்யும் பச்சடிகள் நன்றாக இருக்கும்....தனியே வேறு குருமா போன்றவை தேவை இல்லை....நேரமும் மிச்சம்.......
மேலும் -  நமது கற்பனைக்கு ஏற்ற படி கையில் கிடைத்த காய்கறிகளையும் சப்பாத்தி மாவுடன் கலந்து செய்யலாம்...நீங்களும் செய்து பார்த்து எனக்கு சொல்லுங்களேன்.....

பூரி வகைகள் 

32 . கோதுமை மாவும், மைதா மாவும் சம பங்கு சேர்த்து செய்தால் பூரி சுவையுடன் இருக்கும். (மைதாவை அறவே தவிர்க்க முடியா விட்டால்). தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு அல்லது கடலை பருப்பு குருமா. 

33 .
சாதாரண முறையில் பூரி செய்து கொள்ளவும்.  புதினா, கொத்தமல்லி, இஞ்சி, புளி அல்லது தக்காளி வதக்கி அரிது வைத்துக்கொள்ளவும்....ஓமபொடி வாங்கி அல்லது செய்து வைக்கவும்....உருளைக்கிழங்கையும், வேக வைத்து தோலுரித்து, பிசையவும்...பிறகு பரிமாறும்பொழுது, பூரிகளை பிய்த்து , அதன் மேல் ஓமபொடி தூவி , மசித்த உருளைக்கிழங்கு கலந்து, புதினா சட்னியை ஊற்றி, சிறிதாக  நறுக்கிய வெங்காயம் , கொத்தமல்லி இல்லை கலந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாபபிடுவர். 

பொதுவாக இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள குழம்பு, சாம்பார் சட்னியை விட துவையல் போல செய்து கொடுத்தால் , சாப்பிடும்பொழுது  முழுங்காமல் கண்டிப்பாக சுவைத்து சாபபிடுவர். 
தமிழவேள் குறிப்பில் பல வகையான துவையல் வகைகள் (கத்திரிக்காய் துவையல் போன்ற புதுமையான) உள்ளன. செய்து சுவைத்து மகிழுங்கள்.... 


இன்னும் தொடரும்...சுவையான இணை உணவுகள்(களி, கூழ் போன்ற) , எளிய துவையல் வகைகள்...நொறுக்கு தீனி ரகங்கள்.....
அன்புடன்,
மகேஸ்வரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.