புதன், 21 மே, 2014

மேல் படிப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் கவணத்துக்கு

மேல் படிப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் கவணத்துக்கு.
தற்பொது நீங்கள் எடுக்கப்போகும் முடிவு உங்கள் வாழ்க்கையின் திசையை முடிவு செய்யக் கூடியது.. நீங்கள் தேர்ந்தெடுத்த மேல்படிப்பு உங்களுக்கு கொடுக்கப்போவது என்ன?
எதன் அடிப்படையில் நீங்கள் உங்களுக்கான மேல்படிப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
உங்கள் விருப்பத்துக்காகவா? அறிவைப் பெருக்கவா?  வருமானத்துக்காகவா? மற்றவர்களின் நன்மைக்காகவா? கிடைத்த மதிப்பெண்களுக்கு ஏற்ப ஏதேனும் படிக்க வேண்டுமே என்றா?  பெருமைக்காகவா? பொழுது போக்குக்காகவா?
 இது குறித்து தெளிவான பார்வை நல்லது.
உங்கள் விருப்பம் 
இது எதன் மேல் கட்டப்பட்டது உங்கள் உடல் நலம், மனநலம், சூழல் நலம், மகிழ்ச்சி, பாதுகாப்பு, அமைதி போன்றவற்றைப் பற்றிய புரிதலின் அடிப்படையில் அமைந்ததா? இல்லை, பெருமையின் அடிப்படையில் கண்மூடித்தனமான விருப்பமா?
நம்மைச் சுற்றி அறியாமையில் உள்ளவர்களால் சிறு வயதிலிருந்து நமக்குள் திணிக்கப்பட்ட விருப்பமா? நம்மை ஆளும் வணிகர்கள் கூட்டம் அவர்கள் தேவைக்காக நம்மீது திணித்த விருப்பமா?
அறிவுக்காக
நமது அடிப்படைத் தேவைகளை எளிதாகப் பெற மற்றும் மேன்மையுற பெற உதவுவதே அறிவு. அடிப்படைத் தேவைகள் என்பது; பசி,தாகம், தூக்கம், ஓய்வு, கழிவு நீக்கம், நட்பு, உறவு, அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், அமைதி,போன்றவையே. இதை எளிதாக பெற்றுக் கொடுப்பதே.கல்வி-  அறிவியலாகும்.
இந்த அடிப்படைத் தேவைகளை நமக்கு அன்னியமாக்குவது எப்படி அறிவாகும் எப்படி அறிவியலாகும்.
இந்த தேவைகளைப் பெற தடையாக இருப்பது அழிவு அதை சொல்லித் தருவது அழிவியலாகும்.
வருமானம்
வாழ்க்கை வேறு வசதி வேறு. நாம் ஈட்டும் வருவாய் நமக்கு வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை பெற உதவினால் அது நன்று. அதைவிடுத்து நமது அடிப்படைத் தேவைகளுக்கு எதிராக மாறினால் அவை வருமானமல்ல செலவீனமே ஆகும்.
பெரும்பாலான பணம் படைத்தவர்கள் அவர்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத பரிதாபகரமான ஏழைகளாக இருக்கிறார்கள்.
பணம் அல்லது செல்வம்; அதை ஈட்டும் முறையே அது வருமானமா? இல்லை செலவீனமா? என்பதை முடிவுசெய்து விடுகிறது.
மற்றவர்களின் நன்மை
தன்னலத்தைப் பேணாதவன் பிறருக்கு சுமையே. அறிவுள்ளவர்களின் சுயநலமென்பது பொதுநலமே. தனது அடிப்படைத் தேவைகளை உணர்ந்தவர்களின் சுயநலம் எப்போதுமே எல்லோர்க்கும் நலம் தரும்.
தன்னை உணராத தனது தேவையை உணராத பதர்களின் பொதுநலம் என்பது அவர்களுக்கும் பிறர்க்கும் அழிவைத் தான் தரும்.
தியாகம், சகிப்புத் தன்மை என்பது எப்போதும் அடிமைகளைச் சுரண்ட ஆள்பவர்களும், ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்தும் மோசமான ஆயுதம்.
வேறு வழியில்லை கிடைத்த மதிப்பெண்ணுக்கானது
தேர்வு, போட்டி அடிப்படையிலான கல்விமுறை ஒரு மாணவனின் உண்மையான திறமைகளை வெளிப்படுத்தாது. மதிப்பெண் எடுத்தவர்களை விட மதிப்பெண் எடுக்காதவர்களை தாழ்வாக பார்ப்பது தவறு.
மனப்படாம் செய்து ஒப்பிக்கும் கல்வி முறை நமது படைப்பாற்றலை அழித்து அடிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டது.
வாழ்வில் வெற்றிபெற்றவர்கள் தனது அடிப்படைத் தேவைகளை எளிதில் பெறக் கற்றவர்களே. அதற்கு தற்போதய கல்வி உதவாது.
பெருமைக்காக
பெருமைக்காக செய்யும் எதுவும் கேடானதே. இதனால் யாருக்கும் பயனில்லை.
உண்மையில் நமது இயல்பை பெருமைக்கான முயற்சிகள் அழித்துவிடும்.
நமது தேவைகளின் அடிப்படையிலேயே தேடல்கள் இருக்க வேண்டும்.
பொழுது பொக்கு
வாழ்க்கையை வாழ அறியாதவர்களே பொழுதுபோக்கை விரும்புபவர்.
இந்த பதர்களாலேயே இப்பொழுது கோமாளிகளும் கூத்தாடிகளும் ஆள்பவர்களாக இருக்கிறார்கள். தான் வாழ விரும்புபவன் பிறர் ஆட்டபாட்டங்களில் கிறங்கி தன்னிலை இழக்க மாட்டான்.
பிறர்  பாடுவதையும், ஆடுவதையும், வாழ்வதையும் ஊடகங்களில் கண்டுமகிழ்பவர்கள் தன் வாழ்வின் கொண்டாட்டங்களை அறியமாட்டார்கள். இவர்கள் இரசிகர்களாயும், விசிறிகளாயும், தொண்டர்களாயும், பக்தர்களாயும் போலி முகங்களுக்கு அடிமைப்பட்டு தன்னையும் தான் வாழும் சூழலையும் வீணாக்குகிறார்கள். இவர்கள் வாழவிரும்புபவர்களைப் பார்த்து பொறாமையால் வெம்பி போகிறார்கள்.
இந்த வாழ்க்கை வாழ்வதற்கே. முழு ஈடுபாட்டுடனும் விருப்பத்துடனும் வாழ்பவர்களுக்கே வாழ்க்கை.
அவசரம் வேண்டாம்.
அவசரம் என்றால் கெட்ட மூச்சு என பொருள். இது நன்மை தராது. பொறுமையும் அமைதியும் நன்மை தரும்.
மேற்படிப்பு என வலையில் மாட்டிக்கொண்டு பின் வாழ்நாள் முழுதும் மனம் வெம்பாமல் சிறிது பொறுமையாக நமது வாழ்வை உறுதிப் படுத்தலாம்.
சிந்தித்துப் பழகுவோம்
நமது இயல்புக்கு பொருந்திய நமது அடிப்படைத் தேவைகளை முழுமை செய்கிற கல்வியைத் தேட நேரம் ஒதுக்குவோம்.
ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆனாலும் குற்றமில்லை. நமது தேவைகளை நாம் அறியவும் அதை பெறும் வழியை நாம் அறியவும் பயிலுவோம்.
வாழ்வியலைக் கற்போம்
இந்த கல்வி பல்கலைக் கழகங்களில் கிடைப்பது அரிது. கிடைத்தால் பயன்படுத்தலாம். இல்லையேல் அது இருக்கும் இடம் தேடிச் சென்று கற்றுக்கொள்வோம்.
இயற்கையிடம் கற்றுக் கொள்வோம்.
நன்மையை நாடுபவர்களுக்கு இறைவன் இறைஞானங்களாக வழிகாட்டுவான்.
நன்மையை நாடி வாழும் மக்களிடம் சென்று வாழ கற்றுக் கொள்வோம்.
இவர்கள் உடல் நலமுடனும், மனநலமுடனும், மகிழ்ச்சியாகவும், சமாதானத்துடனும், பிற மனிதர் மற்றும் இயற்க்கையுடன் கூட்டாகவும், வாழ்கிறார்கள்.
இந்த உலகில் வாழத் தெரிந்த மனிதர்கள்  தம் வாழ்வை வாழ்கிறார்கள் அவர்களைத் தேடி நாமும் எளிய வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொள்வோம்.

எல்லாச் செல்வமும் வாழ விரும்புபவர்களுக்கானது.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
கைபேசி 9345812080,9444776208
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.